Monday, October 11, 2010

பரத்தை கூற்று - CSK

காட்டுப் பூக்களால் தொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு வாலியுடன் துவந்த யுத்தத்தில் இருக்கிறான் சுக்ரீவன். வாலியின் அடி ஒவ்வொன்றும் பாறையென சுக்ரீவன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த கூறிய அம்பு வாலியின் தேகத்தைத் துளைத்து இதயத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. அம்பினை எடுத்துப் பார்த்து ராமபாணம் என்று தெரிந்துகொள்கிறான்.

"மறைவில் இருந்து தாக்குகிறாயே சூரியகுலத்தில் உதித்த உனக்கு இது தகுமா? உன்னுடைய குலத்திற்கே களங்கம் ஏற்படுத்திவிட்டாயே? என்று ராமனைப் பார்த்துப் பொருமுகிறான்.

"நீ மட்டும் சுக்ரீவனை துரத்திவிட்டு அவனுடைய மனைவியை அனைத்துக் கொண்டாயே அதுமட்டும் ஞாயமா?" என்று ராமன் கேட்கிறான்.

"ஒரு தார கற்பொழுக்கம் எல்லாம் மனித குலத்திற்குத் தான். வானரர்களுக்கு இல்லை. அதற்காகவா என்னைக் கொன்றாய்..." என்று வாலி கேட்கிறான். (அதன் பிறகு ராமனுக்கும், வாலிக்கும் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யம் வாய்ந்தது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதைப்பற்றி பேசலாம்...)

"குரங்கிலிருந்து மனிதன் பரிமாண வளர்ச்சி கண்டான்..." என்பது குட்டலினி கபாலத்தைத் தொட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்ட விஷயம். மனிதர்கள், யாரும் யாருடனும் வெளிப்படையாகப் புணரலாம் என்பது கலாச்சார ரீதியாக முகம் சுளிக்கக் கூடிய விஷயம். ஏனெனில் நாகரீகத்தின் நிழலைப் பின் தொடர்ந்து நாம் வெகுதூரத்திற்கு வந்துவிட்டோம். அதில் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும், திருநங்கைகளுக்கு ஒரு விதமாகவும் நம் சமூக அமைப்பு செயல்படுவது வேதனைக்குரிய உண்மை.

பெண் விபச்சாரிகளைக் கணக்கெடுத்துப் பார்க்கையில் ஆண் விபச்சாரிகளோ, திருநங்கைகளோ மிகவும் குறைவு. அதிலும் பெண் விபச்சாரிகளில் பலரும் நிர்பந்தத்தினால் தான் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களின் மனச் சோர்வும், மன உளைச்சலும் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையின் இறுதியாண்டில் இருக்கிறேன். சொற்சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆண்டுவிழாவில் பேச இருக்கிறார். ஆர்வமுடன் மாணவர் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். வந்தவர் பேசினார். அது பேச்சல்ல... மாயவெளி... ஆம்... அவரின் பேச்சு என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றது. அதில் 'வேசியின் கல்லறையும்' அடக்கம்.

வேசியின் சமாதியைப் படிமமாக வைத்து கவிதை எழுதுமாறு கேட்டிருந்தார்கலாம். அதற்கு ஒரு கவிஞன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தானாம். எழுதியவன் கல்லூரி மாணவன் என்பதால் அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த வரிகள்...

'இன்றுதான் இவள் -
நிம்மதியாகத் தூங்குகிறாள்.
இனிமேலும் இப்படித்தான்...'
வேசியின் கல்லறை

மேலுள்ள நான்கு வரிகள் வேசிகளின் விழிப்பு நிலை வேதனைகளை, காமத்தின் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்பதை உணர்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஓய்வின் குளிர்ச்சியை, உறக்கத்தின் வாசனையை, தனிமையின் அழகை, வாழ்வின் நிம்மதியை பரத்தையின் சமாதி மட்டுமே அவளுக்குக் கொடுக்கிறது.

இந்தக் கவிதையை நான் கேட்டுக் கொண்டிருந்த வயதில் நண்பர் CSK வேசிகளின் உணர்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்திருக்கிறார். பரத்தையின் கூற்றாக 500 கவிதைகளை அப்பொழுதே எழுதியிருக்கிறார்.


அவற்றில் சிறந்ததெனத் தோன்றிய 150 கவிதைகளை அச்சில் கொண்டு வந்திருக்கிறார். மொத்தம் ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார். பாரா-வின் பயிலரங்கில் தான் முதன் முதலில் CSK-வைப் பார்த்தேன். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அந்த நட்பில் புத்தகத்தை தபாலில் அனுப்பியிருந்தார். தொகுதியிலுள்ள சில கவிதைகளை அவரின் அனுமதியுடன் இங்கே வாசிக்கக் கொடுக்கிறேன்...

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

0
விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய் -
எவனும் மனசு தொட்டதில்லை

முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

0
இன்றைய தேதியில் இங்கே
எவளுக்கும் சாத்தியமில்லை
பெய்யெனப் பெய்யும் மழை

0
எம் இனத்தின்
பாரம்பரிய உடை
நிர்வாணம் -
முழு நிர்வாணம்

மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

0
காமமடக்கியதால்
ஞானமடைந்தனர்
யோகிசிலர் - யாம்
அது அலுத்ததால்

0
எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?

இதே போல நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்) பாலை (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்) கவிதைகளும் பரத்தைமையின் அங்கதக் குரலை உரத்துச் சொல்பவையாகத்தான் இருக்கிறது.

பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

0
பள்ளிக்கூடம் சேர்க்கையில்
மகனின் குலம் கேட்கின்றனர்
சாதிச்சான்றிதழ் சரிபார்த்துச்
செய்வதில்லை விமச்சாரம்

அடிமைத்தனம், வெட்கம், இயலாமை, பிழைப்பு, மிடுக்கு, போலீசின் கெடுபிடி, இளக்காரம், அவமானம், ஆணாதிக்கம், கீழ்ப்பார்வை, வெறுப்பு, தேவை, நிர்பந்தம், கோவம், நடிப்பு என்று வேசிகளின் உணர்வுகளை கவிதையின் ஒவ்வொரு மூலையிலும் உணர முடிகிறது.

நீண்ட நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் நேர்முகத்தில் வைரமுத்து பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் "யாருடன் உரையாடுவது சுவாரஸ்யம் நிறைந்தது?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. "காதலி, இலக்கிய நண்பர்கள், பால்ய சிநேகிதர்கள்" இதில் எதையாவது ஒன்றை சொல்லுவார் என்று அந்த நொடியில் யோசித்துவிட்டேன்.

அவருடைய பதில் என்னுடைய யூகத்தை பொடிப்பொடியாகச் சிதறச் செய்தது. "வேசி" - என்ற ஒற்றைப் பதிலை உதிர்த்துவிட்டுச் சிரித்தார். ஓர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் ரகசியங்கள் அவளிடம் தான் பொதிந்து கிடக்கும். அதையெல்லாம் அவள் சொல்லக் கேட்டால் நேரம் போவது தெரியாமல் உரையாடிக் கொண்டிருக்கலாம் என்றார். ரகசியத்தைத் தெரிந்து கொள்வதுதானே உலகிலுள்ள சுவாரஸ்யமான விஷயம்.

பரத்தைகளின் உணர்வுகளில் காமத்தை தவிர மற்ற எல்லா உணர்வுகளும் கூட ரகசியம்தான். அதைப் போட்டு உடைக்கும் கவிதைகள் தான் 'பரத்தை கூற்று'.

ஆசிரியர்: சி.சரவணகார்த்திகேயன் (http://www.writercsk.com)
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
விலை - ரூ.50/-

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் கிருஷ்ணபிரபு

சரவண கார்த்திகேயனின் பரத்தை கூற்ரு - புத்தக விமர்சனம் அறிமுகம் அருமை

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு நண்பரே.

ஆதவா said...

மிக நல்ல விமர்சனம்... எடுத்துக்காட்டிய கவிதைகளும் புத்தகத்தை வாங்கச் சொல்லுகிறது!!! நல்ல தரமாகவும் இருக்கிறது.
இதற்கு முன்னர் காமக்கடும்புனல் (ஆசிரியர் : மகுடேசுவரன்) படித்திருக்கிறேன். எனில், இக்கவிதைகள் தனித்திருக்கிறது..

Unknown said...

@ அன்பின் சீனா,

பின்னூட்டத்திற்கு நன்றி... வலைச்சரம் பல திறமையானவர்களையும் அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி. உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

@ செ.சரவணக்குமார்

வாங்க சரவணா... புத்தகம் கிடைப்பின் வாங்கிப் படியுங்கள். நன்றாக இருக்கிறது.

@ ஆதவா

மகுடேஸ்வரன் இந்த தொகுப்பிற்காக உதவி செய்திருக்கிறார். அதை முன்னுரையில் CSK குறிப்பிட்டிருக்கிறார். வாங்கிப் படியுங்கள் நன்றாக இருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

உங்களது விர்சனமும், குறிப்பிட்டுள்ள கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை..

J S Gnanasekar said...

கல்லறை வாசகங்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றில், தான் ரசித்த சில கவிதைகளாக வைரமுத்து அவர்கள் மேற்கோள் காட்டிய பேட்டி ஒன்றில்தான் வேசியின் கல்லறைக் கவிதை பற்றியும் கேள்விப்பட்டேன். அவர் சொன்ன இன்னும் இரண்டு கவிதைகள் இப்படி வரும்.

அரசியல்வாதி.
சத்தம் போடாதீர்கள்
எழுந்து பேசினாலும்
பேசிவிடுவான்.

குடிகாரன்.
தண்ணியில் மிதந்தவன்
தரையிலே மூழ்கிவிட்டான்.

'தன்னை விரும்பியவர்களை நிராகரித்தவனும், தான் விரும்பியவர்களால் நிராகரிக்கப்பட்டவனும்' என்று கல்லறையில் எழுதச் சொல்லி ஒரு கவிதையில் வைரமுத்து சொல்வார்.