Saturday, August 7, 2010

சொல்லில் அடங்காத வாழ்க்கை - ஷாஜி

வெளியீடு : உயிர்மை
ஆசிரியர்: ஷாஜி
தமிழில்: ஜெயமோகன்
விலை: 120 ரூபாய்

இசை, கேட்பவர்களின் உணர்வுகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடிய விஷம். உணர்ச்சிகளின் வடிகாலாகவும், காயங்களின் ஆறுதலாகவும் உயிரினங்களை அற்றுப்படுத்தக் கூடிய விஷயம். எனவே ஆத்மாவுடன் இணைந்து ஒரு படைப்பைக் கொடுக்கும் பொழுதுதான் கலைஞர்கள் பிரகாசிக்கிறார்கள். ஆகவேதான் ரசிகர்களும் அவர்களின் பின்னால் ஓடுகிறார்கள். இசை பல பரிமாணங்களில் உலகமெல்லாம் ரசிக்கப்படுகிறது. 'கிளாசிக், செமி கிளாசிக், லைட் மியூசிக், பாப்,ராக்' என்று தனித் தனியாக இசையைக் கொண்டாடும் ரசிகர்கள் எங்கும் இருக்கிறார்கள். ரசிகர்களின் இசை மீதான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கலைஞர்கள் கால இடைவெளியில் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். சில உன்னதமான கலைஞர்கள் காலத்தால் மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

மகுடி ஊதும் பாம்பாட்டிகளும், நாதஸ்வரம் இசைக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களும் தான் எனக்கான சிறுவயது ஆதர்சனங்கள். ஒரு கைப்பிடி அரிசிக்காக மகுடி இசையும், நாதஸ்வர இசையும் எங்கள் தெருக்களில் வழிந்தோடி இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருமுறை எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுதும் எங்களுக்கான பிரம்மிப்புகளை சுமந்துகொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகைக்குப் பின்னாலுள்ள வலியினை, வறுமையினை, வாழ்க்கைப் பின்புலங்களை ஒருநாளும் அறிந்ததில்லை.

அடைகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டினை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவருவதைப் போல குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்ததும் என்னை பெரிதும் ஆக்ரமித்த விஷயம் திரையிசைதான். 'இசையமைப்பாளர்கள், பாடக பாடகிகள், பாடலாசிரியர், கருவிக் கலைஞர்கள்' என்று பிரித்தறியத் தெரியாமல் எல்லாவற்றையும் ஒன்றாக உள்வாங்கி சந்தோஷித்த ஆரம்ப நாட்கள் வானொலி முன்பும், தொலைக் காட்சி முன்புமே கழிந்திருக்கின்றன. கல்லூரி வாழ்க்கையில் தான் திரைப்படத்தின் பல்வேறு கூறுகளையும், திரையிசையின் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மூலம் பல பரிமாணங்களும், பங்களிப்பாளிகளின் திறமைகளும் தெரியவந்தது. மகுடி இசையின் மயக்கத்தைக் காட்டிலும் போதையான நாட்கள் அவை. குறிப்பாக பாடகர்கள் மீதும், கருவி இசைக் கலைஞர்கள் மீதும் எனக்கு இருந்த போதை அளவிட முடியாத ஒன்று. அவர்களில் ஒருவரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று பல பெயர்களைக் குறித்து வைத்திருந்தேன். இறுதியில் நான் பார்த்த ஒரே பாடகி ஜானகி அம்மா மட்டுமே.

எனக்கு ஒருமுறை வாய்த்த அனுபவம் பன்னாட்டு இசை நிறுவனங்களில் வேலை செய்ததால் ஷாஜிக்கு பலமுறை கிடைத்திருக்கிறது. அந்த அனுபவங்களையும், அவருடைய சிறுவயதில் ரசித்த கலைஞர்களின் வாழ்க்கையையும் கட்டுரைகளாக்கி இருக்கிறார். சலில் சௌத்ரி, மெஹ்தி ஹசன், பாப் மார்லி, ஏ எம் ராஜா, ராஜ்குமார், மன்னா டே, ஃபிரெடி மெர்குரி, MSV, கீதா தத், S ஜானகி, போனிஎம், RK சேகர் என்று பலரைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ஜெயமோகன் உயிர்மைக்காக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஷாஜியின் தமிழ் வலைப்பூவில் வாசிக்கக் கிடைக்கிறது. (http://musicshaji.blogspot.com)

ஷாஜியின் இளையராஜா பற்றிய கருத்துக்களுடன் கொஞ்சமும் ஒத்துவராதவன் நான். நாளை மதியம் (Aug 8 2010) கேணி சந்திப்பிற்கு செல்ல இருப்பதால் அவரைப் பற்றிய புரிதலுக்கு உதவியாக இருக்குமென்று வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்ந்து மறைந்த மேதைகளைப் பற்றிய மேலோட்டமான வரலாற்றுக் குறிப்புபோல் அமைந்துள்ள புத்தகம் என்பதால் டிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

2 comments:

RAGUNATHAN said...

//ஷாஜியின் இளையராஜா பற்றிய கருத்துக்களுடன் கொஞ்சமும் ஒத்துவராதவன் நான்//

நானும்தான் ;)


நூல் அறிமுகத்துக்கு நன்றி
கிருஷ்ணா :)

priyamudanprabu said...

நூல் அறிமுகத்துக்கு நன்றி